Tuesday, February 12, 2019

விவாஹம் என்பது செலவில்லாத வைதீக கர்மா    மஹா பெரியவா

விவாஹம் என்பது செலவில்லாத வைதீக கர்மா....!!! -
       மஹா பெரியவா

சாஸ்திரப்படி, விவாஹம் சாஸ்திரப்படிப் பொருளாதார விஷயமில்லை. விவாஹம் என்பது ஸந்தியாவந்தனம் மாதிரியான செலவில்லாத ஒரு வைதிக கர்மாதான். இதில் நூதன தம்பதிக்கு (புது மணமக்களுக்கு) புது வஸ்திரம் - நூலே போதும் - தங்கத்தில் லேசாக திருமாங்கலியம், ரொம்பவும் நெருங்கின பந்துக்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது, முஹ¨ர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சப்தம் கேட்கப் பண்ணி அதற்காக ஏதோ கொடுப்பது, வாத்தியார் தக்ஷிணை ஆகியவற்றை மட்டுமே செய்தால் போதும். இது பூர்ணமாக சாஸ்திர சம்மதமானதுதான். இப்படிப் பண்ண ஒரு குமாஸ்தாவுக்கும் முடியாமல் போகாது. பணம் கொழித்தவர்களுங்கூட, தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே பண்ணவேண்டும். ஏனென்றால் அவர்கள் பண்ணுகிற டாம்பிகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட precedent (முன்மாதிரி) ஆகிவிடுகிறது!

ஆகையால் கச்சேரி, ஃபீஸ்ட் என்று தாங்கள் செலவிடக் கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வசதியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். இப்படிப் பண்ணினால் தண்டச் செலவாகப் போகக்கூடியதை தர்மக் கரென்ஸியாக மாற்றிக் கொண்டதாகும். ஒவ்வொரு பணக்காரரும் தம் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறபோதே அதில் செலவைக் கட்டுப்படுத்தி இன்னொரு ஏழைப் பெண் கண்ணைக் கசக்காமல் வழி திறந்து விடலாம். 'மாஸ்'உபநயனம் மாதிரியே பல பேருக்கு ஒரு பொது இடத்தில் பொதுச் செலவில் கல்யாணங்கள் நடத்த ஏற்பாடு செய்யலாம். இதனால் அவரவருக்கும் செலவு நிரம்பக் குறையும். இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள்.

எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால பிளாட் குடித்தனத்தில் வீட்டிலேயே பண்ண முடியாதுதான். அதனால் தர்மிஷ்டர்கள் ஒன்று சேர்ந்து வசதியில்லாதவர்களுக்காக அங்கங்கே சின்ன சின்ன கல்யாண மண்டபங்கள் கட்டித்தர வேண்டும். கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக்கொண்டு ஓடின பெண்கள், அப்புறம் (கல்யாணம்) ஆகுமா ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலை ஏற்பட்டு, இப்போது நிலைமை முற்றி கல்யாணமே இல்லாமல் உத்தியோக புருஷியாக ஸ்வயேச்சையாக இருக்கலாமென்று ஏற்பட்டிருக்கிறது.

இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான ஸ்திரீ தர்மம் வீணாகி வருகிறது. நடக்கக் கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது. இதிலே வயிற்றரிச்சல் என்னவென்றால், இந்தத் தப்புக்களைத் திருத்தல் வேண்டும் என்ற வேகம் யாருக்கும் வராதது மட்டுமில்லை; 'ஸைகாலஜி', அது இது என்று சொல்லிக் கொண்டு இந்தத் தப்புக்களையே விஸ்தாரம் பண்ணி, அவற்றுக்கு ஸமாதானமும் சொல்லி, கதைகள் எழுதி, ஸினிமாக்கள் எடுத்து, இதனாலேயே இதை நன்றாக அபிவிருத்தியும் பண்ணி வருகிறார்கள்!

கேட்டால் (கேட்பதற்கே ஆளில்லை!) 'எழுத்து ஸ்வதந்திரம், கல்பனை ஸ்வதந்திரம், கலா ஸ்வதந்திரம்'என்பார்கள். சாஸ்திரத்தைத் தவிர எல்லாவற்றுக்கும் குடியரசு யுகத்தில் ஸ்வதந்திரம் ஏற்பட்டிருக்கிறது! விவாஹம் சாஸ்திரப்படிப் பொருளாதார விஷயமில்லை என்பதில் ஆரம்பித்தேன். 'எல்லாம் ஸரி! ஆனால் சாஸ்திரத்தில் நாலு நாள் கல்யாணம் சொல்லியிருக்கிறதே! நாலு நாள் விருந்துச் சாப்பாடு, சத்திர வாடகை என்றால் செலவாகுமே, என்கலாம்.

நாலு நாள் கல்யாணத்தைப் பற்றிச் சொல்கிறேன்: சாஸ்திரத்தில் தாரித்திரியம் உண்டாக்குவதற்காக கர்மாநுஷ்டானங்கள் சொல்லப்படவில்லை. விவாஹம் பண்ணுகிறது ஒரு நாள்தான். அப்புறம் மூன்று நாள் மாப்பிள்ளை தன் சொந்த வீட்டில் பிரம்மசரிய தீஷையோடு இருக்கவேண்டும். அந்தக் காலத்தில் மேளம் வேண்டாம். நலுங்கு வேண்டாம். மாற்ற விரும்புகிறவர்கள் இப்படி மாற்றலாம். இதுதான் வாஸ்தவமான சீர்திருத்தம் ( reform ) பிள்ளையகத்துக்காரர் இதைச் செய்யலாம். "ஒருநாள் கல்யாணம் உங்கள் அகத்தில் செய்வேன். பாக்கி மூன்று நாள் எங்கள் அகத்தில் செலவில்லாமல் பண்ணவேன்" என்று சொல்லிவிடலாம்.

கல்யாணம் ஆன மறுநாள் கிருஹஸ்தன் ஒளபாஸனாக்னியைத் தன் வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி ஒளபாஸன குண்டத்தை எடுத்துக் கொண்டு வரும் போதும், வண்டியில் வைக்கும் போதும், நுகத்தடியில் மாடுகளைப் பூட்டும்போதும், வழியில் வைக்கும் போதும், மறுபடியும் வண்டியில் வைக்கும்போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இருக்கின்றன. இப்பொழுது மந்திரோக்தமாகவே மோட்டாரிலோ, ரயிலிலிலோ வைத்துக் கொண்டு வரலாம். அதனால் ஒரு தோஷமும் இல்லை.

அந்த நாளில் பக்கத்து ஊர்களிலேயே சம்பந்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒரு தோஷமும் இல்லை. அந்த நாளில் பக்கத்து ஊர்களிலேயே சம்பந்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒளபாஸன குண்டத்தை கொண்டு போவது ஸெளகரியமாக இருந்தது. அல்லது நாலு நாள் கலியாணத்தை இன்னொரு விதம் பண்ணலாம். இப்பொழுது கலியாணம் நடத்துகிற இடத்திலேயே பிள்ளையகம் என்று ஒன்று வைத்துக் கொள்கிறோமே, அங்கேயோ, வாடகை அதிகமானால் யாராவது உறவினர் வீட்டிலோ மூன்று நாளும் பண்ணவேண்டியதைப் பண்ணலாம்.

யாரையும் சாப்பிடச் சொல்லவேண்டாம். ஸம்பந்திக்குக்கூடச் சாப்பாடு போட வேண்டாம். உபாத்தியாயருக்கு மட்டும் ஸம்பாவனை பண்ணினால் போதும். ஒரு நாளில் எல்லாவற்றையும் முடித்துவிடுவது சாஸ்திர சம்பந்தமே இல்லை. விவாஹத்துக்கு ஸம்வத்ஸர தீஷை, அதாவது விவாஹமாகி ஒரு வருஷம் பிரம்மசரிய நியமம்; பிறகே சாந்தி கல்யாணம் - என்கிற நிலைமை பிற்பாடு மாறி, நாலு நாலாவது இப்படி நியமத்தோடு இருப்பதாக ஏற்பட்டது. கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்து அப்புறம் கட்டெறும்பும் இல்லை என்று இப்போது நடப்பதுபோல் ஒரே நாளோடு தீர்த்து விடக்கூடாது.

மூன்று நாள் ஒளபாஸனம் நிச்சயம் செய்ய வேண்டும். தெலுங்கர்கள் கல்யாணத்தில் வதூ-வரர்கள் (மணமக்கள்) வெள்ளை நூல் வஸ்திரத்தை மஞ்சளில் நனைத்துக் கட்டிக் கொள்ளுகிறார்கள். அது சிக்கனமாக இருக்கிறது. எத்தனை தனிகரானாலும் அதைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தர தேசத்திலும் ஸாதாரணமாக ஸாமான்ய வஸ்திரங்களைத்தான் பெண்கள் கட்டிக் கொள்ளுகிறார்கள். இங்கே நாமும் அப்படிச் செய்ய ஆரம்பிக்கலாம். பிரவேச ஹோமம் என்று விவாஹ காலத்தில் ஒன்று செய்வதுண்டு.

இது வரன் தன் வீட்டில் பிரவேசிப்பதற்குப் பண்ணுவது. விவாஹாக்கினியை எடுத்துக் கொண்டுபோய் ஒளபாஸன ஹோமத்தைத் தன்னுடைய வீட்டில் அவன் பண்ண வேண்டும். அங்கே பண்ணுவதற்குத்தான் ஒளபாஸனம் என்று பெயர். ஸெளகர்யத்தை உத்தேசித்தும் சாஸ்திர சம்மதமாகவும் நான் முன்னே சொன்னபடி பிள்ளையகத்தார் வந்து தங்கும் ஜாகையிலே செய்யலாம். கோவிலுக்குப் போய் ஒரு நாள் கல்யாணம் பண்ணிவிட்டு வந்து விடுவது என்பது தப்பான காரியம்.

பார்ட்டி, ரேஸ் என்று செலவழிக்கிற பணக்காரர்களும் நாலு நாள் ஒரு சாஸ்திரோக்த சடங்கு செய்யப் பிடிக்காததாலே இப்போதெல்லாம் கோயிலில் போய் தாலிகட்டி ஒரு வேளையோடு முடிக்கிறார்கள். பணக்காரர்கள் அப்படிச் செய்ய ஆரம்பித்தால் ஏழைகளும் பின்பற்றிக் கெட்டுப்போவார்கள். நான் சொல்வதை அநுஸரித்தால் நாலு நாள் பண்ணுவதில் செலவு இல்லை. பெண் ரிதுமதியான பின் விவாஹம், அதுவும் ஒரு நாள் கலியாணம், மறுநாளே அவளை (புத்தகத்துக்கு) அழைத்துப் போவது என்பதில் ஏற்பட்டிருக்கிற இன்னொரு விபரீதந்தான் விவாஹத்தன்றே சாந்தி கல்யாணம் பண்ணுவது. விவாஹமானவன் திரிராத்திர தீஷையோடு இருக்க வேண்டுமென்பது அத்யாவசியம்.

அதாவது மூன்று நாட்களும் பூர்ண பிரம்மசரிய நியமத்தை அநுஷ்டிக்க வேண்டும். பிரம்மசரியம் எட்டு விதம். எப்போதுமே பிரம்மசரியம் இருக்க முடியாதவனும் சிற்சில தினங்களில் அந்த நியமத்துடன் இருக்கும்படியாக இந்த எட்டு விதிக்கப்பட்டிருக்கின்றன. அதமபக்ஷமாக, கல்யாணமான முதல் மூன்று தினங்கள் இப்படி இருக்க வேண்டும். இதுவும் போய், அன்றே நிஷேகம் என்பது மஹாதோஷம். மறுபடி மறுபடி சம்பந்திகளைக் கூப்பிடுவது, சாப்பாடுக்குச் செலவழிப்பது, மேளத்துக்குச் செலவழிப்பது என்றில்லாமல் ஒன்றாக பண்ணிவிடலாமே என்று இப்படிப்பட்ட தோஷத்தைச் செய்கிறார்கள். சாஸ்திரத்தில் இல்லாத தடபுடல்களைக் கொண்டு வந்து விட்டு, அப்புறம் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணின் கல்யாணம் வரையில் (அவளுடைய ஸஹோதரனான) பிள்ளையின் பூணூலை ஒத்திப் போடுவது, கல்யாணத்தன்றே ஸாந்தி கல்யாணத்தையும் (மந்திரோக்தமாகக் கூட இல்லாமல்) பண்ணிவிடுவது என்றெல்லாம் முறை கெட்டுச் செய்து வருகிறோம்.

ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும். இதில் பந்து மித்ரர்கள் செய்யக்கூடிய ஒரு உபகாரமும் உண்டு. அதாவது, கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் போகத்தான் வேண்டும் என்பதில்லை. பிரயாணத்துக்குச் செலவிட்டு ரயில்காரனும், பஸ்காரனும் வாங்கி கொள்வதில் என்ன பிரயோஜனம்?அதையெல்லாம் சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணிகிறவனுக்கு ரொக்கமாக அனுப்பிவிட வேண்டும். இதனால் விருந்துச் சாப்பாடு என்று ஒரு செலவு குறைவது ஒரு பக்கம்;அவசியமான செலவும் சீரும் செய்ய கல்யாணம் பண்ணிகிறவனுக்கு வரவினம் வலுப்பது இன்னொரு பக்கம்.

பண சம்பந்தத்தால் சாஸ்திரோக்த வாழ்க்கையே கெட்டுப் போய்விட்டது. சாஸ்திரோக்தமாக மாறுவதற்கு நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல் பண்ணிக் கொண்டு விட்டால் போதும்.

எனக்கு மூன்று விதத்தில் செலவைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது

(1) எல்லோரும் - நல்ல பணக்கார வீட்டு ஸ்திரீகளுல்பட- பட்டு முதலான பகட்டுத் துணிகளைவிட்டு கடைசித்தரமான வஸ்திரந்தான் வாங்குவது என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

(2) காப்பிக்குத் தலைமுழுகிவிட்டு காலையில் கோதுமைக் கஞ்சிதான் சாப்பிடுகிறதென்று வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மோர் சாப்பிடலாம். காப்பி சாப்பிடுவது என்ற ஒரு பழக்கத்தைப் பண்ணிவிட்டதால் Substitute அதை மாற்ற ஏதாவது ஒன்று) வேண்டுமல்லவா?தக்ரம் (மோர்) அமிருதமென்று வைத்திய சாஸ்திரம் சொல்கிறது. இப்படிச் செய்வதனால் அநேக குடும்பங்களில் செலவில் நூற்றுக்கு அறுபது பங்கு குறைந்துவிடும் என்று தோன்றுகிறது. 'அரிசி எவ்வளவு ரூபாய்த்து வாங்குகிறோம்?பால், காப்பிக் கொட்டை எவ்வளவு வாங்குகிறோம்?என்று கணக்கு பார்த்தால் பால், காப்பிக்கொட்டைக்குத்தான் அதிக செலவு.

(3) விவாஹத்துக்காகப் பணத்தைக் கொண்டு வா என்று வரதக்ஷிணை வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பண்ணினால் டம்பம் போவது ஒன்று;நல்ல ஆரோக்கியமும் மனஸின் அபிவிருத்தியும் ஏற்படுவது இன்னொன்று;மூன்றாவதவாக சாஸ்திரோக்தமான வாழ்க்கையையும் வழங்களையும் நிலை நிற்கும்படிப் பண்ணுவது.

விவாஹத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில் இத்தனை கதையும் வந்து சேர்ந்து விட்டது. இன்னொரு கதை விட்டுப் போச்சு. அதையும் சொல்கிறேன். புருஷப் பிரஜைகளைவிட பெண் பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம் சொன்னேன். மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது காரணம் என்றேன். இன்னொன்று தோன்றுகிறது. அதையும் சொல்கிறேன். எனக்குத் தோன்றுவது மட்டுமல்ல, சாஸ்திரத்திலேயே சொல்லியிருப்பதுதான்.

அதாவது ஒளபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததி உண்டாகும். பிராசீனமான ஆசாரம் உடையவர்களுக்கு துர்பலம் இல்லை;வியாதி இல்லை. பிராசீன ஆசாரத்தை இப்பொழுது கொஞ்சமாவது அநுஷ்டித்து வருகிறவர்கள் ஸ்திரீகள்தாம். அதனால் அவர்களிடம் உண்டாகிற பிரஜைகளிலும் அதிகமாகப் பெண்களே இருக்கிறார்கள். புருஷர்களும் அதிகமாகப் பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் இப்போதைவிட ஆண் ஸந்ததி அதிகமாக உண்டாகும். இரண்டும் ஸமவிகிதமாகும். ஸ்தல தரிசனம், தீர்த்த ஸ்நானம், பூஜை முதலியவைகளைப் புருஷர்கள் பண்ணி வந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கும் சேர்த்து ஸ்திரீகள் பண்ணுகிறார்கள்!

புருஷர்கள் ஆசாரத்தை விட்டதனால் புருஷப் பிரஜைகள் குறைவாக ஆகிவிட்டார்கள். ஆகவே பாக்கி எதற்காக இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கை எகனாமிகலாக நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காவது புருஷர்கள் ஆசார அநுஷ்டானங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தாரித்திரிய நிவர்த்திக்கும் வரசுல்க (வரதக்ஷிணை) நிவர்த்திக்கும் ஆசார அநுஷ்டானந்தான் வழி. கூட்டங்கூடி, சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு யோஜிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்கள். அந்த மாதிரிக் காரியங்களெல்லாம் தற்கால சாந்தியானவையே. பரிகாரம் நிரந்தரமார இருப்பதற்கு இதுதான் மருந்து.

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)

+91 9790111570