Sunday, January 10, 2021

அனைவரும் அறிய வேண்டிய தெய்வ ரகசியம்

1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது,

2 .நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது.

3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும்.

4 . அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும்.

5 .இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்,

6 .வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

7 .வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.

8 . வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.

9 .பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,

10 .வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும்,

11 .மயில் இறகை கையில் வைத்திருந்தாலும்,

12 .எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.

13 .எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.

14 .உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.

15 .துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)

16 .ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும்.

17 .நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.

18 .பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும்.

19 .நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்,
20 .பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.

21 .அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும் தீயசக்தியும் விலகிவிடும்.

22 .மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது விலக வழிகிடைக்கும்.

23 .இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும் .

24 .கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

25 .நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும்.

26 .நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.

27 .சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.

28 .வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.

 நண்பர்களே இங்கொரு விஷயத்தை கவனத்தில் வைக்கவும். திருஷ்டி மற்றும் திட்டமிட்டு செய்யும் சூன்யம் வைப்பு போன்றவை எவரையும் தாக்கிவிடும். தீய எண்ணத்தாக்கம் கொண்ட உணவை உண்டாலும் உணவு விஷமாகிவிடும். அதனால்தான் விரோதி வீட்டில் கை நனைக்காதே என்பார்கள். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மந்திர உபாசனை செய்பவராகட்டும் சாமான்யராகட்டும் வெளியில் செல்லும்போது காலணி அணிந்து செல்லுங்கள். கால்அடிகளை பதிப்பதனால் அது ஆலயத்தின் உள்ளே மற்றும் விருட்சத்தின் அடியில் இருக்கலாம். கண்ட இடங்களில் கால் அடியை பதித்தால் அதன்மூலம் மண்ணெடுத்து சூன்யம் செய்ய மற்றவருக்கு வாய்ப்புள்ளது.

தலைமுடியை கண்ட இடங்களில் போடவேண்டாம். முடிவெட்டும்போது முடி விழத்தான் செய்யும். ஆனால் அங்கு வேறொருவரின் முடியுடன் நம் முடி கலந்துவிட்டால் சூன்யம் வேளை செய்யாது. உங்கள் அழுக்கு துணியை பத்திரமாக வைத்து துவைத்து விடவும். விரோதி கையில் சிக்கும்படி வைக்காதீர்கள். உங்கள் அழுக்கு துணி மற்றவர் வியர்வையில்பட்டால் கூட நீங்கள் வசியமாகிவிடுவீர்கள் கவனம். வெளியில் சாப்பிடாதீர்கள். வாராவாரம் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொள்ளுங்கள், தெய்வ பிராத்தனையை எப்பொழுதும் கைவிடாதீர்கள்.

 இவைகளையெல்லாம் கடைபிடித்தும் மேற்படி உங்களிடம் தீயசக்தி உள்ளதாக உணர்ந்தால் மந்திர சித்தியான மாந்திரீகரிடம் சென்று நிவாரணம் பெறலாம்.

உடற்கட்டு மந்திரம் போட்டுக்கொண்டவரை எந்த தீயசக்தியும், திருஷ்டியும், வைப்பும் அணுகாது. உணவு மூலம் விஷயம் ஏறினால்தான் உண்டு. எனவே உடற்கட்டு காபந்து உள்ளவராயினும், உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். சூரியசக்தியை உடலில் பெருக்கிக் கொள்கிறவர்களுக்கு திருஷ்டி சூன்யம் அண்டாது. யார் தொடுத்தாரோ அவரையே திருப்பி தாக்கிவிடும். அதனால்தான் சூரியன் அம்சமான சிம்மராசி லக்கணம் மற்றும் சூரிய நட்சத்திரக்காரர்களை எவர் ஒருவர் திருஷ்டி சூன்யம் வைப்பு செய்தாலும் வைத்தவரையே திருப்பி தாக்கிவிடும் என்பர் இது முற்றிலும் உண்மையே.
பிரம்ம ரிஷிகளான துர்வாசர், விசுவாமித்திரர், வசிஸ்டர் போன்ற ரிஷிகளின் ஆசியால் அரிய சக்தி கொண்டவர்களை தாக்குபவர்கள் அவர்களையே பன்மடங்கு தாக்கிக் கொண்டதற்கு சமமான கெடுபலன் விளையும் என ஆசி வழங்கியுள்ளதால் சூரியசக்திக்கு எதிர்சக்தி இல்லாமல் போனது. (சூரிய சக்திகாரர்கள் தன் வினையில் மட்டுமே தன்னை அழித்துக்கொள்ள முடியும்.) எனவே நண்பர்களே சூரிய வழிபாட்டின் மூலம்(சூரிய நமஸ்காரம்) சூரியசக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள். எல்லாம் நலமாய் அமையும். தீயசக்திகளை பிறருக்கு விரட்ட செப்பு தகட்டில் கோரப்பல் தெய்வங்களின் மந்திரத்தை மனதால் தியானித்து ஒரு முக்கோணம் கீறி முக்கோண மூன்று முனைகளிலும் சூலம் கீறி முக்கோண மத்தியில் தெய்வத்தை நினைத்து ஓம் என்று எழுதி அதை தாயத்தில் அடைத்து பாதிக்கப்பட்டவரை கட்டிக்கொள்ள சொன்னாலே போதும் தீயசக்தி விலகிவிடும்.🌹🙏 
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Thursday, January 7, 2021

முக்குண வேளையும் விளக்கமும்

   மானுட ஜனன விகிர்தியில் முகூர்த்தம் என்பது 2 நாழிகை அளவாகும். இந்த முகூர்த்த காலம் பகலில் 15 முகூர்த்தங்களாகவும், இரவில் 15 வரையரை செய்யப்பட்டு ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் என்றும், ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் ஒரு தேவகணத் தலைவர் அதிதேவதாவாக இருப்பார்.
    அதுபோலவே, ஒரு நாளின்  சூரிய உதய நாழிகையிலிருந்து மூன்றேமுக்கால் நாழிகை  ( அதாவது 1 மணி 20 நிமிடம் ) என்ற விகிதத்தில் முக்குண வேளை கணிதமிடப்பட்டிருக்கின்றது  .
  திங்கள், வியாழன் நாட்களில் முதலில் சாத்வீக வேளையும், செவ்வாய், வெள்ளி நாட்களில் இராஜஸ வேளையும், ஞாயிறு, புதன், சனி நாட்களில் தாமஸ வேளையும் அந்தந்த நாட்களின் சூரிய உதய நேரத்திலிருந்து வரிசைக்கிரமமாக நடைபெறும் என்பதால், 
      இந்த முக்குண வேளை என்பது சாத்வீகம், இராஜஸம், தாமஸம் என்றும் வகைப்பட்டுத்தப்பட்டிருப்பதை பெரும்பாலும் நாமும் அறிவோம். இந்த முக்குணவேளையானது ஜனனமிக்கும் ஒவ்வொரு சிசுவின் குணாகுணங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுகின்றது என்றால் அதுமிகையில்லை. 
     ஆகவே, ஒரு மனிதன் பிறந்த நேரமானது 
      சாத்வீக வேளையில் அமைந்திருந்தால் தேகப்பொலிவு உள்ளவனாகவும், அறிவாளியாகவும், புத்திசாலித்தனம் மிகுந்தவனாகவும் லௌகீக இன்பங்களையெல்லாம் அனுபவிப்பவனாகவும், பெரியோர்களிடத்தில் மரியாதையும், பக்தியும் உள்ள நாகரீகமான வாழ்க்கையை வாழ விரும்புபவனாகவும் இருப்பான்.
  இராஜஸ வேளையில் பிறந்தவராக இருந்தால்,
    மக்களுக்குப் பயன்படும்படியான காரியங்களைச் செய்பவனாகவும், தான தர்மங்களை இயற்றும் அதிகாரம், அந்தஸ்தும் பெற்று அரசனைப்போன்ற வாழ்க்கையுடையவனாக வாழ்வான்.
   ஒருவேளை தாமஸ வேளையில் பிறந்தவரென்றால் மயக்கமும், சோம்பலும் உடையவனாகவும், சதாகாலமும் பல இடங்களைக் கண்டு சுற்றித்திரிபவனாகவும், சுறுசுறுப்புகுறைந்தவனாகவும், பொய் சொல்லத் தயங்காதவனாகவும், தூக்கத்தில் அதிக பிரியமுள்ளவனாகவும், போஜனப்பிரியனாகவும், கல்வியில் தடை உள்ளவனாகவும் வாழ்ந்திருப்பான்.
    ஆகவே, ஒரு ஜாதகத்தில், ஜாதகரின் குணபாவங்களைக் கணித்துக்கூறும்பொழுது இந்த முக்குணவேளையையும் , அந்த ஜாதகருக்கான பரிகார பலன்களைக்கூறும்பொழுது அந்த முகூர்த்தகால அதிதேவதாவையும் அறிந்து பலன் சொல்வதே சிறப்பு.!!  
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Tuesday, January 5, 2021

ஒரு ஜாதகருக்கு உத்யோகம் எப்படி அமையும்

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு  வேலை எப்போது கிடைக்கும்?

 ஒருவரின் ஜாதகத்தில் அரசு வேலை என்பது எப்போது அமையும் என்பதை பார்ப்பதற்கு முன்னர் அரசு வேலைக்கான அமைப்பு உண்டா என்பதையும் முன்னரே தீர்மானிக்கவேண்டும். பொதுவாக சம்பாதித்தியத்திற்கு  காரகத்துவம் வகிக்க கூடிய சம்பாத்ய காரகன் சூரியன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

ராசியில் மட்டுமின்றி அவர் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருப்பது கூடுதல் பலம்.

முக்கியமாக சூரியன் பகை, நீசம் போன்ற நிலையில் இருக்கும்போது திக்பலம், வர்க்கோத்தமம், வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருப்பது, வலுவான சுப கிரகங்களின்  பார்வையில், இணைவில் இருப்பது அவசியமாகும்.

அடுத்ததாக  எந்த ஒரு வேலையில் நிலைப்பதற்கு கடின உழைப்பு தேவை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக காலபுருஷ லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் உச்சமடையும் செவ்வாயும் பலம் பெற்றிருப்பது சிறப்பு.

அடுத்ததாக கர்மகாரகன், தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான், கால புருஷ இலக்னத்திற்கு தொழில் மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி பகவான் நல்ல நிலையில் (சுபர்களின் பார்வை) இருப்பது சிறப்பு.

நாடி ஜோதிட முறையில் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானின் நிலையைக் கொண்டே தொழில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட கிரகங்கள் லக்னத்திற்கு 3,6,10 ,11 ஆதிபத்தியம் பெறுவதும் மேற்கண்ட இடங்களில் நல்ல நிலையில் இருப்பதும் சிறப்பு.

காலபுருஷ லக்கனத்திற்கு பாக்கியாதிபதியான குரு பகவானின் பார்வையைப்  மேற்கண்ட கிரகங்கள் பெறுவதும் மேன்மையாகும்.

🌟ஏன் 3, 6, 10, 11ம் பாவகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன?  

மூன்றாமிடம் முயற்சி ஸ்தானம், வெற்றி,

கீர்த்தி, புகழ் போன்றவற்றை குறிப்பிடும் இடம்.  அப்படிப்பட்ட முயற்சி ஸ்தானத்தில்  தன்னம்பிக்கை கிரகம் சூரியன் இருப்பதும், சுறுசுறுப்புக்கு  காரணமாக இருக்கும் செவ்வாய் இருப்பதும் வேலைக்கான முயற்சி  எடுப்பதற்கான தன்னம்பிக்கையையும் துணிவைத் தரும்.

அடுத்ததாக ஆறாமிடம் ஒருவரின் அடிமை ஜீவனத்தை  சுட்டிக் காட்டும் இடம். அவ்வகையில் அரசு வேலை என்பதும் அடிமை வேலை தானே..

அதே நேரத்தில் ஆறாம் பாவகம் போட்டித் தேர்வுகளை குறிக்கும் பாவகம், அரசுவேலைக்கு  முக்கிய தகுதியாக இருப்பது போட்டி தேர்வு வெற்றியே.

 அடுத்ததாக பத்தாம் பாவகம், ஜாதகரின் தொழில் மற்றும் கர்ம ஸ்தானம். ஜாதகரின் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய தொழில் திறன் போன்ற விஷயங்களைச் சுட்டிக் காட்டும் இடம். மேற்கண்ட பத்தாம் பாவகத்தில் சூரியன், செவ்வாய் திக்பல நிலையில்  பலம் பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது. கால புருஷ லக்னத்திற்கு பத்தாம் அதிபதியும், இலாபாதியுமான  தொழில்காரகன் சனி ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில்  நல்ல நிலையில் இருக்கும்போது உழைப்பதில் அவருக்கு அதிக ஈடுபாடு இருக்கும்.

அடுத்ததாக பதினொன்றாம் பாவம் ஒருவரின் வருமானத்தை சுட்டிக்காட்டக் கூடிய இடம், குறிப்பாக தொழிலில் ஏற்படும் வருமானம், பத்தாம் வீட்டிற்கு தனஸ்தானம் பதினொன்றாம் பாவகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் பதினொன்றில் சூரியன் இருப்பது அரசு வகையில் வருமானத்தை ஏற்படுத்தித்தரும்.

நிறைவாக 3, 6, 10, 11ம் பாவங்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றொரு சூட்சுமமும் அடங்கியிருக்கிறது.

மேலே நான் கூறிய கிரகங்கள் அனைத்துமே பாப கிரகங்கள்.

🌟3, 6 ,10 ,11 உபஜெய ஸ்தானங்கள். உபஜெய ஸ்தானங்களில் பாபகிரகங்கள் தானே இருக்கவேண்டும்?

இவற்றுடன் லக்னம், லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். லக்னம், லக்னாதிபதி வலுக் குறைந்த நிலையில் இருக்கும் பொழுது ராசி, ராசி நாதன் வலுவாக இருந்தால் ராசியில் இருந்து 3, 6, 10, 11 பாவகங்களை எடுத்துக்கொள்ளலாம்.

போட்டித் தேர்வுகள் மூலம் வேலையைப் பெறுவதற்கு அளப்பரிய விஷயமாக இருப்பது ஞாபகசக்தி. அந்த வகையில் ஒருவரின் ஞாபக சக்தியை குறிப்பிடும் 5ஆம் இடம், 5-ஆம் இடத்து அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். அல்லது ஞாபக சக்திக்கு காரகத்துவம் வகிக்கக்கூடிய குரு பகவான நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

அடுத்ததாக எந்த கிரகம் எந்த வேலையைத் தரும் என்று பார்த்தோமேயானால் போதிக்கும் தொழில், பணம், நகை தொடர்புடைய தொழில்கள், வங்கி தொடர்புடைய தொழில்களுக்கு குருவும், புதனும்  காரகத்துவம் வகிக்கிறார்கள்.

கட்டுமானம், இயந்திரம், வருவாய் துறை  சம்பந்தப்பட்ட பணிகளுக்கு செவ்வாயும்,

உள்ளாட்சி, மக்கள் தொடர்புடைய சேவை  பணிகளுக்கு சனிபகவானும், அரசியல், அதிகாரத்தை வெளிப்படுத்தக்கூடிய பதவிகளுக்கு சூரியனும் பொறுப்பினை ஏற்கிறார்கள்.

மருத்துவம் தொடர்புடைய பணிகளுக்கு சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு குரு தொடர்பு இருக்க வேண்டும்.அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு கேது பொறுப்பினை ஏற்கிறார்.

பயணம் தொடர்புடைய அரசுப் பணிகளுக்கு சந்திரன் பொறுப்பினை ஏற்கிறார்.

இரயில்வே தொடர்புடைய பணிகளுக்கு இரும்பு மற்றும் இயந்திரத்திற்கு காரகத்துவம் வகிக்கூடிய சனியும் செவ்வாயும் பொறுப்பு ஏற்கிறார்கள்.

ரயில்வே பணி என்பது பயணம் தொடர்புடையது என்பதால் சந்திரனும் ஒருவகையில் பொறுப்பினை ஏற்பார்.

அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களையும் ஒரே பதிவில் விளக்கிவிட  இயலாது என்பதால்

அடுத்ததாக வேலை எப்போது கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

 வேலை எப்போது கிடைக்கும் என்பதை கண்டறிய  அவரின் வருமானம் எப்போது உயரும் என்பதை ஆராய்ந்தாலே போதும். மேற்கண்ட நிலைகளில் கிரகங்கள் தசாபுக்தி நடத்தும் நிலையில்

அடுத்து வரக்கூடிய தசாபுக்திகள் அவரின் வருமானத்தை உயர்த்துவதாக இருந்தால் அவர் கண்டிப்பாக பதவியில் அமர்வார்.

குறிப்பாக தன ஸ்தானாதிபதி, லாபாதிபதி, உயர்வை குறிப்பிடும் ஒன்பதாம் அதிபதி, அடிமை ஜீவனத்தை உற்பத்தி குறிப்பிடும் ஆறாம் அதிபதி, பதவியை குறிப்பிடும் பத்தாம் அதிபதி, பூர்வ புண்ணிய பலனை உணர்த்தும் ஐந்தாம் அதிபதி,

ஜாதகருக்கு நன்மை செய்யும் லக்னாதிபதி, 

பத்தில் திக்பலம் பெற்ற சூரிய, செவ்வாய் 

தசா புக்திகள் நல்ல நிலையில் நடக்குமேயானால்,

இவற்றுடன் கோச்சாரமும் ஓரளவு ஒத்துழைக்கும் போது ஜாதகர்

 அவர் வேலையினை பெற  தயாராகிவிட்டார் என்பது தெரியவரும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புகள் உங்களது ஜாதகத்தில் தென்படுமேயானால் நீங்கள் தாராளமாக அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்.
நன்றி. 🙏🙏.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

மூலநக்ஷத்திரத்தின் உன்னதம்

              மூல விிருக்ஷம்
'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்' என்பது உண்மையா?

இந்தப் பதிவில் மூலம் எனும் மகா உன்னதமான நட்சத்திரம் குறித்துப் பார்ப்போம்.
இந்த நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 19 வது நட்சத்திரம். மூலம் நட்சத்திரம் தனுசு எனும் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ராசியில் இடம்பெற்றிருக்கும்.

மூல நட்சத்திரம் அனைத்திற்கும் மூலமாக விளங்கக் கூடியது. உங்கள் பரம்பரைப் பாரம்பரியம் 14 தலைமுறைக்கு நீடிக்குமா என்பது குறித்து உங்களுக்குக் தெரியுமா?
எளிமையான வழி உண்டு. உங்கள் குடும்பத்தில் மூல நட்சத்திரத்தில் ஒரு குழந்தை... ஒரேயொரு குழந்தை பிறந்திருந்தாலும் ... ’என் பரம்பரை 14 தலைமுறைக்கும் நீடிக்கும்’ என்று உறுதியாகச் சொல்லலாம். உங்கள் 14 தலைமுறையைக் காணும் பரம்பரையாக உங்கள் குடும்பம் இருக்கும் என்பது சத்தியம்.

மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்கிறார்களே...

எனவே மூலம் நட்சத்திரத்தைக்கொண்டிருக்கும் பெண்ணை நிராகரிப்பது என்பது இன்னும் தொடர்கிறது. இந்த கிறுக்குத்தனம் இப்போது ஆண்களுக்கு மூலம் நட்சத்திரம் என்றாலும் வேண்டாமென நிராகரிக்கத் தொடங்கி வளர்ந்திருக்கிறது.

இது எவ்வளவு பெரிய பாவச்செயல் என்பதை உணருவதே இல்லை.

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்!

இந்தப் பழமொழியை தலைக்கு மேல் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் பலரும். இதன் உண்மையான பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே இல்லை.

சரி... ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நீர்மூலம். இது சரியா தவறா? இதற்கு என்ன அர்த்தம்?
நாம் நினைத்துக் கொண்டிருப்பது முற்றிலும் தவறு. “ஆனி மூலம் அரசாளும்,பின் மூலம் நிர்மூலம்” என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசனைப்போல் வாழ்வார்கள். பின் மூலம்.. அதாவது மூலம் நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் நிர்மூலமாக்குவார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்.

‘இதுதான் எங்களுக்கே தெரியுமே! வேற ஏதாவது விளக்கம் இருந்தா சொல்லுங்க...’ என்று சொல்லுபவர்களும் இருக்கலாம்.

மூலம் நட்சத்திரம் தனுசு எனும் 9வது வீட்டில் இருக்கும் முதல் நட்சத்திரம். இந்த 9ம் வீடு தான் பாக்கியஸ்தானம் என்கிற நல்ல யோகங்களை தரக்கூடியதாகும். மேலும் பூர்வீகச் சொத்து, தந்தை வழி மூதாதையர் நிலை என்னும் பிதுர் ஸ்தானம் என்பதைக் குறிக்கிறது. பரம்பரையின் தொடர்ச்சியையும் சொல்லக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆக பரம்பரையின் தொடர்ச்சிக்கான ஆணிவேர் எனும் மூலம் தான், அதாவது அஸ்திவாரம்தான் தனுசு மூலம் நட்சத்திரம்.

நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என சொல்லப்படுவது உண்டு.

ஆமாம்... மூலம் நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கு ஜாதகம் என்ற ஒன்றை எழுதவே கூடாது, எழுதவும் அவசியமில்லை. அந்த நட்சத்திரத்துக்குப் பலன் பார்க்கவும் கூடாது. பலன் சொன்னாலும் பலிக்காது. அவ்வளவு பரிசுத்தமான உன்னதமான நட்சத்திரம் மூலம்!
ஒரு ரகசியம் தெரியுமா?

மூலம் நட்சத்திரம் தவிர மற்ற எல்லா நட்சத்திரத்திற்கும் பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். அதுமட்டுமல்ல ஒரே நட்சத்திர ஆண் பெண் ஜாதகத்தை இணைக்கக்கூடாது என்பதும் ஜோதிட விதி. ஆனால், மூல நட்சத்திர ஜாதகம் வந்தால் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு? அதுமட்டுமல்ல “மூல நட்சத்திர பெண்ணுக்கு மூல நட்சத்திர ஆண் ஜாதகத்தை தாராளமாகச் சேர்க்கலாம்” என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி.

என்னுடைய மதுரை நண்பர் ஒருவரின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் மூலம் நட்சத்திரம்தான்! இருவருக்கும் வயது 70-ஐ நெருங்கியிருக்க, இன்று வரை ஆத்மார்த்த தம்பதியாக எல்லா செல்வ வளத்துடன் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த தம்பதி ஒரேயொரு உதாரணம். இன்னும் பல ’மூலம்’ நட்சத்திர ஜாதகங்கள். தம்பதிகள் விவரம் என்னிடம் உள்ளது.

ஜோதிடம் என்பது கடல். அதை நுனிப்புல் மேய்ந்த கதையாக எடுத்துக் கொண்ட ஒருசில ஜோதிடர்களின் மிகப்பெரிய குறைபாடு இது. எனக்கும் ஜோதிடம் தெரியும் என்று புத்தகங்களையும் கூகுளையும் வைத்துக் கொண்ட மனிதர்களாலும், இந்த மூல நட்சத்திரத்தின் பெருமை உலகிற்கு தெரியாமலேயே போய்விட்டது, சோகம்தான்!
மூலம் அனைத்திற்கும் மூலம். அவ்வளவு ஏன் ஜோதிடத்திற்கே மூலம் நட்சத்திரம்தான் மூலம். ஆமாம்... ஜோதிடத்தை முழுமையாக அறிய வேண்டுமானால் இந்த மூல நட்சத்திரத்தில் ஏதாவதொரு கிரகம் இருக்க வேண்டும். அல்லது இந்த மூல நட்சத்திரத்தின் அனுஜென்ம, திரிஜென்ம நட்சத்திரமான அஸ்வினி, மகம் ஆகிய நட்சத்திரங்களிலாவது கிரகம் இருக்க வேண்டும். அது குரு, புதன் அல்லது சந்திரனாக இருந்தால் ஜோதிடம் மிக நன்றாகவே வசமாகும். ஆக ஜோதிடத்திற்கே மூலம்தான் மூலமாக இருக்கிறது.

சாஸ்திரங்களுக்கு முதன்மையானவரான குரு பகவான் வீடுதான் தனுசு ராசி. அந்த தனுசில் முதல் நட்சத்திரமாக இருப்பது தான் மூல நட்சத்திரம்.

இந்த மூல நட்சத்திரம் சிங்கத்தின் வால் போன்றும், மலை போன்ற யானையை அடக்கும் அங்குசம் போலவும், வெற்றியைக் குறிக்கும் Y வடிவத்தையும் கொண்டிருக்கும்.

இதன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். எவரையும் அடக்கி ஆள்பவர்கள். வெற்றியைத் தவிர வேறு எதையும் அறியாதவர்கள்.

இன்னொரு சிறப்பம்சமும் மூல நட்சத்திரத்துக்கு உண்டு.

தோல்வியே சந்திக்காத, நிகரற்ற சக்தியை தன்னுள் வைத்திருக்கிறம், சூரியனையே பழம் என நினைத்து விழுங்கப்போன ஶ்ரீராம பக்த அனுமன் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். சிவபெருமானின் அம்சமாகவும், மகாவிஷ்ணுவின் சேவகனாகவும் இருக்கும் அனுமனை வழிபட்ட எவரும் எந்த நிலையிலும் கைவிடப்படுவதில்லை, தோல்வியைச் சந்திப்பதில்லை என்பது நிதர்சனம்.

எனவே தான் இந்த மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயம் என்பதே அறியாதவர்களாகவும், தோல்வி என்பதை சந்திக்காதவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அதாவது மூல நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வேறு எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் வெற்றியைத் தவிர வேறு எதையுமே வாழ்க்கையில் சந்திக்க மாட்டார்கள்.

மூலம் வெற்றியின் அடையாளம். மூலம் அஞ்சாமையின் அடையாளம். மூலம் சிங்கத்தின் ஒப்பற்ற சக்தியின் அடையாளம்.

இன்னும் இருக்கிறது மூலம் நட்சத்திரத்தின் பெருமைகள்...
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com