Tuesday, September 27, 2016

பெரியவா  சரணம்

பெரியவா  சரணம்

இளம் வயதுப் பையன் பழத்தட்டுடன் வந்து பெரியவாவை பவ்யமாக நமஸ்காரம் செய்தான். நீங்க தான் என்னோட குரு என்றான். ரொம்ப பேர் அப்படி சொல்லிண்டிருக்கா! உதடு பிரியாத புன்னகை. நான் அப்படியில்லே. உங்களைக் குருவாக வரித்து விட்டேன். எனக்கு ஸ்ரீ வித்யா ஷோடசி மந்திரம் உபதேசம் பண்ணணும். என்னைப்பரம சாக்தனாக ஆக்கணும். ஜான் வுட்ராஃபின் தந்திர நூல்களையெல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். Serpent  Power எனக்கு  நெட்டுருவே 
ஆயிடுத்து. பெரியவா நிதானமாகக் கேட்டார் நீ இப்போ என்ன சாதனை பண்ணிண்டிருக்கே? லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சௌந்தர்ய லஹரி, மூக பஞ்சசதி, ஆனந்த ஸாகர ஸ்தவம், சியாமளா தண்டகம்... இது போறும். அம்பாளைத்   தியானம் செய்... பையனுக்கு எரிச்சலாக வந்தது. சாக்தத்தில் தான் இவ்வளவு ஊறியிருந்தும் பெரியவா மந்திரோபதேசம் செய்ய ஏன் மறுக்கிறார் என்பது புரியவில்லை? பெரியவா எனக்குக் கட்டாயமா மந்திரோபதேசம் செய்யணும்.   அதற்காகவே நாள் பார்த்துக் கொண்டு இன்றைக்கு வந்திருக்கிறேன். உபதேசம் பெறாமல் போக மாட்டேன். என்றான் பிடிவாதமாக.

பெரியவா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். உனக்குப் பசிக்கிறதா?   
"இல்லே "
" பசி எடுத்தா என்னென்ன சாப்பிடுவே?  "
" சாதம், குழம்பு, கூட்டு, அவியல், அப்பளம், ரசம், மோர்..."
" உங்கம்மா நீ பிறந்த அன்னைக்கே சாதம் போட்டாளா? "
" இல்லை பால் தான் கொடுத்தா.... "
" அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சாதத்தையும், பருப்பையும் வெழுமூணா பிசைஞ்சு ஊட்டினாள். அப்புறமா இட்லி, தோசை,   சாம்பார், வெண்டைக்காய் கறி, புடலங்காய் கூட்டு... இப்படித் தானே? "
" ஆமாம்.... "
" ஏன் அப்படிச் செய்தா? பொறந்த உடனேயே சாதம் ஊட்டியிருக்கலாமே? "
" ஜீரணம் ஆகாது குழந்தைகளுக்கு ஒத்துக்காது கெடுதல் பண்ணும்.... "
இடையில் யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள் குறைகளைக் கேட்டு ஆறுதல் கூறினார் ஸ்ரீ மடம் அலுவல்களை உத்தரவிட்டார். பின்னர் பையனைப் பார்த்தார்.

" மந்திரங்களுக்கு ஜீவசக்தி உண்டு. கண்ணுக்குத் தெரியாத தெய்வீக அலையாக தேகம் முழுவதும் பரவும். அதை குழந்தைகளாலே தாங்கிக்க முடியாது. பால் குடிக்கிற அதே குழந்தை தக்க வளர்ச்சி ஏற்பட்டதும் சாதம், சாம்பார் சாப்பிடும்.

" உனக்கு  இப்போ பால பருவம் பால் பருவம் காத்திண்டிரு. சாதப் பருவம் வரும். அப்போது உனக்கு சாதம் ஊட்டுவதற்கு ஒருவர் வந்து சேருவார். "

ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த பாலகனுக்கு 'ஸ்ரீ' யே 'வித்யை' காட்டி விட்டாள். தலை நிமிர்ந்து ஆணவமாக வந்த வாலிபன் பாலகனாக மன மகிழ்ச்சியுடன் சென்றான்.

பெரியவா சரணம்

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment