மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2
இது பேத்தல் இல்லை - 12
மஹா பெரியவா பற்றி படிக்கவோ எழுதவோ ஈடுபடுவது எதற்காக என்று யோசிப்பவர்கள், ஆஹா, அது ஒரு பெரிய ஆழமான சமுத்ரத்தில் முத்துகுளிக்க இறங்குவது மாதிரி அல்லவோ? என்று புரிந்து கொள்வார்கள். எடுக்க எடுக்க முத்து வந்துகொண்டே இருக்கும். ஒரே அடியாக எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வர முடியாது.
விட்டு விட்டு தான் திரும்ப திரும்ப மூழ்கவேண்டும்.இதைத் தான் நானும் பண்ணிக் கொண்டு வருகிறேன்.( உங்களோடு சேர்ந்து).
ஒரு நண்பர் இதைப்பற்றிக் குறிப்பிட்டு விடாது எழுதுங்களேன் என்றார்.
நிறைய பேர் எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, அதே விஷயங்களை எப்படி திருப்பி திருப்பி சொல்வது. என்ன பயன்? என்று யோசித்தபோது தான் எத்தனை தடவை மீண்டும் மீண்டும் படித்தாலும் எழுதினாலும் அலுக்கத ஒரு விஷயம் மகா பெரியவா என்று மனதில் பதிந்தது.
ஏன் என்றால் அந்த விஷயத்தின் ரசானுபவம். மற்றொன்று தெரிந்தததே யானாலும் அவர் வாயால் மீண்டும் ஒருமுறை கேட்போமே என்று தலை தூக்கும் ஆர்வம்.
அப்படி '' அவர் வாயால்'' கேட்கத் தோன்றும் வெகு சிலரில் முதலாவது நமது மஹா பெரியவா. -- அவர் சொன்னதின் சாராம்சத்தை சுருக்கி பய பக்தியோடு தருகிறேன்:
'' மறைந்த நம் தாய் தந்தையருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால்என்ன பயன்?
யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைப்போய்ச் சேருமா?,
வெறுமே எள்ளும் நீரும் இறைத்தால் அவர்களுக்கு திருப்தி தருமா?
வெறும் பேத்தல், மூட நம்பிக்கை, வாட் நான்சென்ஸ் என்று சில அரைகுறைகள் இன்றும் கேட்கின்றனர். இவற்றுக்கு பெரியவா தரும் விடை தான் இன்றைய செய்தி.
'மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும்.
''ஆதித்யம்'' (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) விருந்தோம்பல் இதுதான். இது மனுஷ யக்ஞம்.
பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்றுஅர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது.
எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம். எனவே தான் நாம் பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒருரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
வைதிக தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.வேத நெறியில் சொல்லப்பட்டதையே தான் ஏறக்குறைய திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்.
''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.'' புரியலையா? விளக்கம் இதோ.
தென்புலத்தார் = பித்ருக்கள்.
பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையார்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும்
அவசியம் செய்தாக வேண்டும்.
'' மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ'' (''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ") என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கிய மெல்லாம் செய்து தரவேண்டும். (இதைப் படிக்கும் வரை அப்படிச் செய்யாதவர்கள் இந்தக் கணம் முதல் அப்படி தவறாமல் செய்ய ஒரு வேண்டுகோள்.
தாய் தந்தையார் நமக்காகஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல்அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
(சிலர் இதை ஒரு காகிதத்தில் எழுதி பர்சில் வைத்துக் கொள்ளவும்.)
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம், தர்ப்பணம்,சிரார்த்தம் இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் .
''எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன.அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான்.
பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?'' -- ஒரு சீர்த்திருத்த க்காரர் வாய் விட்டுக் கேட்கிறார்.
அவரை விடுங்கள் இதைப் படிக்கும், படிக்கக் கேட்கும் உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம். இது விஷயமாக ஒரு கதை சொல்கிறேன்.
ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். காலேஜில் பரிட்சைக்குப் பணம்கட்டவேண்டியிருக்கிறது.
அதுவும் மறுநாள் கட்ட வேண்டி யிருக்கிறது. உடனே பையன் அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தான் தெரியும். எப்போதோ அடித்திருக்கிறார். சில நேரம் சிலருக்கு மணி ஆர்டர் அனுப்பியிருக்கிறார்.
அது என்ன ''தந்தி மணியார்டர் ''?. அவருக்கு புரியவில்லை. தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்து விட்டுத் ''தந்தி மணியார்டர் ''பண்ண வேண்டும் என்றார்.
தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று காத்திருந்தார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் நாளை போய் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது'' என்றார் குமாஸ்தா
பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காம லிருப்பதையும் பார்த்த
அப்பாக் காரர்,
''என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு நீங்கள் அனுப்பவில்லையே.
அது எப்படிப் போய்ச் சேரும்?''
-- அப்பா
''அது தானாகவே போய்ச் சேர்ந்து விடும்'' -- குமாஸ்தா கட்டுக் கடகட என்று தந்தி அடித்தான் . ஏதோ லொட்டுலொட்டென்று சப்தம் பண்ணுகிறான். பிறகு பணம் போய் சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாயோ என் கண்ணெதிரே இங்கேயே இருக்கிறது.
லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே பணம் எப்படிப் போய் சேரும்?. நான் கொடுத்த பணம் இங்கயே இன்னும் பெட்டியில் இருக்கிறதே ??. அப்பாவுக்குச் சந்தேகம். ஆனால் பணம் போய் சேர்ந்து விட்டது.
தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள்.
பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள்.
குதிரையாகப் பிறந்திருந்தால் கொள்ளாக்கி ,புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்றுகொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.
தந்தி மணியார்டர் அனுப்பியவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லை யல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய்நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் கட்டினாலும் வெளி தேசத்தில் டாலராகவோ,பவுனாகவோ அதை மாற்றித் தரவும் ஏற்பாடு இருக்கிறது.
ஆனால், நம் ஊரில் நம் ரூபாயை அந்த ஊர் டாலராக, பவுனாக மாற்றமுடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப்பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்று பித்ருக்களுக்கு தேவையான உணவாக மாற்றித் தரப்படும்.
பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். இன்னொருவனுடைய ஆரோக்கியத் துக்காக நான் டோஸ்ட் சாப்பிடுகிறேன். என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வெறொருவன் பெயரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள் ஒரு கப்பில் மதுவை ஊற்றி மற்றவன் பெயரைச் சொல்லி தூக்கிக் காட்டிவிட்டு தானே குடிப்பான். இதில் என்ன தெரிந்து கொளவேண்டும் தெரியுமா?
ஒருவரின் மனோபாவத்தின் சக்தியால்இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்புவது. சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம்.
ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால்அதற்குரிய சட்டப்படியாகத் தான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், என் இஷ்டப்படி தான் அட்ரஸ் எழுதுவேன். அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன்?
எங்கள் வீட்டில் அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் தான் போடுவேன் என்று சொல்லலாமா?
காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில்அன்பு, பக்தி, ஞானம் இலற்றைக் கட்டுப்பான்றிச் செலுத்தலாம்.
காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது. இது தான் சாஸ்த்ரம். இது தான் விதி முறை .''
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056
No comments:
Post a Comment